செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் தீவிரவாதம் இந்தியாவிற்கு மிகுந்த கவலை அளிக்கிறது: பஹ்ரைனில் ராஜ்நாத் சிங் பேச்சு

Published On 2016-10-24 14:15 GMT   |   Update On 2016-10-24 14:15 GMT
பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் தீவிரவாதம் இந்தியாவிற்கு மிகுந்த கவலை அளிப்பதாக பஹ்ரைனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மனாமா:

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக பஹ்ரைன் நாட்டுக்கு நேற்று சென்றார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக பஹ்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சர் ரஷித் பின் அப்துல்லா அல் கலிஃபாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது பஹ்ரைனுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ராஜ்நாத் சிங் விவாதித்தார்.

மேலும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி புர்கன் வானிக்கு பாகிஸ்தான் ஆதரவாக கருத்து தெரிவித்து வருவது தீவிரவாதத்திற்கு ஆதரிப்பதாக கலிபாவிடம் கூறினார்.

பின்னர், பஹ்ரைன் இளவரசர் சல்மான் பின் ஹமது அல் கலிபாவை அந்நாட்டின் குடைபியா மாளிகையில் சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து, பஹ்ரைன் அரசர் ஹமத் பின் இசா அல் கலிஃபா, பிரதமர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார்.

முன்னதாக பஹ்ரைன் வாழ் இந்தியர்களிடம் நேற்று இரவு உரையாற்றிய ராஜ்நாத் சிங் தீவிரவாதம் சர்வதேச அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் அதனை எதிர்கொள்ள இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் பஹ்ரைன் முக்கிய இடம் வகித்து வருகிறது. இந்த அமைப்பில் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News