செய்திகள்

மலேசியாவில் கேஸ் பலூன்கள் வெடித்து 31 பேர் காயம்: டெரங்கனு மாநிலத்தில் பலூன்களுக்கு தடை

Published On 2016-10-22 10:50 GMT   |   Update On 2016-10-22 10:50 GMT
மலேசியாவில் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் வெடித்து பலர் காயமடைந்ததையடுத்து பலூன்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்:

மலேசியாவின் டெரங்கனு மாநிலத்தில் உள்ள பூங்கா ஒன்றில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் உலக பார்வை தின விழா நடைபெற்றது. அப்போது ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் காற்றில் பறக்க விடப்படுவதற்குமுன் அதனை காண கூட்டம் கூடியிருந்தது. அதை பறக்கவிடும்போது திடீரென பலூன்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்தது.

சுமார் 150 பலூன்கள் வெடித்து சிதறியதால், பல குழந்தைகள் உள்பட 31 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பார்வையாளர்களின் பலரது முகங்களில் கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

பலூன்களின் சரங்களை அதிகாரி ஒருவர் சிகரெட் லைட்டர் மூலம் தீ வைக்க, அது மிகப்பெரிய தீ பிழம்பாக வெடித்தது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து கேஸ் பலூன்களுக்கு மாநில அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. மேலும், காவல்துறை விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை வந்ததும் மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Similar News