ஈராக் மொசூல் நகர போரில் 550 குடும்பத்தினரை மனித கேடயமாக்கிய தீவிரவாதிகள்
பாக்தாத்:
ஈராக்கில் 2-வது பெரிய நகரமான மொசூல் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை ஈராக் ராணுவம் அமெரிக்க கூட்டுப் படை மற்றும் குர்தீஸ் படையுடன் இணைந்து படிப்படியாக மீட்டு வருகிறது. எனவே ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் அதிரடியாக சண்டை நடைபெற்று வருகிறது.
கடந்த 5 நாட்களாக மொசூல் பகுதியை ஈராக் ராணுவம் முற்றுகையிட்டு ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு கிடுக்கிபிடி போட்டுள்ளது. இதனால் செய்வது அறியாமல் திகைத்து நிற்கும் தீவிரவாதிகள் ராணுவத்தின் கவனத்தை திசை திருப்ப அதன் அருகேயுள்ள கிர்குக் நகரில் தாக்குதல் நடத்தினார்கள்.
அங்கு நடந்த தாக்குதலில் 24 பேர் பலியாகினர். இருந்தும் ஈராக் படைகளை ஐ.எஸ். தீவிரவாதிகளால் வெற்றி பெற முடியவில்லை.
இதற்கிடையே மொசூல், கிர்குக் பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 550 குடும்பத்தினரை பிடித்து மனித கேடயமாக்கி வைத்துள்ளனர்.
மேலும் கிர்குக் நகரில் 5 தற்கொலை படை தீவிரவாதிகள் அரசு அலுவலகங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினார்கள். குறிப்பாக போலீஸ் தலைமை அலுவலகம் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது.