செய்திகள்

ஜப்பானை தாக்கிய நிலநடுக்கத்தால் பலர் காயம் - புல்லட் ரெயில் சேவை பாதிப்பு

Published On 2016-10-21 06:37 GMT   |   Update On 2016-10-21 06:37 GMT
ஜப்பான் நாட்டை இன்று தாக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பலர் காயமடைந்ததாகவும், மின்சேவை பாதிப்பால் புல்லட் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
டோக்கியோ:

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியை (இந்திய நேரப்படி) இன்று காலை சுமார் 10.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.

டோட்டோரி பகுதியை மையமாக கொண்டு பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 அலகுகளாக பதிவானது.

இன்றைய நிலநடுக்கத்தால் யுரிஹாமா நகரில் வீடு இடிந்து விழுந்ததாகவும், குரயோஷி நகரில் பலர் காயமடைந்ததாகவும் ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

நிலநடுக்கத்தின் அதிர்ச்சியால் இந்த நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள சுமார் 40 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் இவ்வழியாக செல்லும் புல்லட் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Similar News