செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடக்க வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் புகார்

Published On 2016-10-17 23:10 GMT   |   Update On 2016-10-17 23:10 GMT
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடக்க வாய்ப்பு இருப்பதாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பும் கூறியுள்ளார்
வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தல் களத்தில் டிரம்பை விட ஹிலாரிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன.

இந்த தேர்தலில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக தொடக்கத்தில் இருந்தே டிரம்ப் கூறி வந்தார். குறிப்பாக அவரது குடியரசு கட்சி வேட்பாளருக்கான வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களின் போது இந்த குற்றச்சாட்டை அவர் வெளியிட்டார். தற்போது கடந்த சில நாட்களாக இந்த புகாரை அவர் தீவிரமாக கையில் எடுத்துள்ளார்.

இது குறித்து தனது 'டுவிட்டர்' தளத்தில் அவர் கூறுகையில், 'இந்த தேர்தலின் போது ஹிலாரியின் நேர்மையற்ற, திரித்து கூறப்படும் ஊடகங்கள் மூலம் பல வாக்குச்சாவடிகளில் கண்டிப்பாக தில்லுமுல்லு நடைபெறும்' என்று தெரிவித்து உள்ளார்.முன்னதாக, 'இந்த தேர்தல் முடிவுகளை ஜனநாயக கட்சியினரும், குடியரசு கட்சியினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் மைக் பென்ஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News