செய்திகள்

இந்தோனேசியாவில் வெள்ளம்-நிலச்சரிவு: உயிரிழப்பு 26 ஆக உயர்வு

Published On 2016-09-22 11:53 GMT   |   Update On 2016-09-22 11:54 GMT
இந்தோனேசியாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
ஜகார்த்தா:

இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜாவா தீவின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கருட், சுமேடாங் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சார்ந்த விபத்துகளில் சிக்கி 8 மாத கைக்குழந்தை உள்பட 6 குழந்தைகளும், 7 பெண்களும் உயிரிழந்தனர். சுமேடாங் மாவட்டத்தில் ஆறுபேர் பலியாகினர். காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கையில் பேரிடர் நிவாரணப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மேலும் சிலரது சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 19 பேரைக் காணவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

வீடுகளை இழந்தவர்களுக்காக அரசு சார்பில் தற்காலிக கூடாரங்கள், தற்காலிக சமையலறை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமூக அமைப்புகள் உதவி செய்கின்றன.

Similar News