ஹெல்மெட் அணியாமல் சென்றதை தட்டிகேட்டதால் சமூக சேவகருக்கு போலீஸ்காரர் மிரட்டல்
- தமிழக காவல் துறையில் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- காவலர்கள் பலர் ஹெல்மெட் அணியாமலேயே வாகனம் ஓட்டுவது வாடிக்கையாகி உள்ளது.
சென்னை:
தமிழக காவல் துறையில் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் காவலர்கள் பலர் ஹெல்மெட் அணியாமலேயே வாகனம் ஓட்டுவது வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலையில் சென்னை பாடி பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற போலீஸ்காரரை சமூக சேகவர் ஒருவர் 'ஏன் ஹெல்மெட் அணியவில்லை' என்று கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் நான் ஹெல்மெட் போடுறேன், போடாமல் போறேன். உனக்கென்ன என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இன்று காலையில் தான் இந்த வீடியோவை தனது செல்போனில் சமூக சேவகர் காசிமாயவன் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன் அவர் ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
இன்று காலையில் பாடி மேம்பாலத்தில் இருந்து அண்ணாநகர் ஆர்.டி.ஓ அலுவலகம் செல்லும் வழியில் போலீஸ்காரர் ஒருவர் தலைகவசம் அணியாமல் ஹெட்போனில் பேசிவாறு சாலையில் வந்து கொண்டு இருந்தார்.
நீங்கள் தலைகவசம் அணிந்து செல்லாலமே என்று கேட்டதற்கு நான் போலீஸ் அப்படி தான் செல்வேன் என்று ஆபாசமான வார்த்தைகளில் என்னை தீட்டினார். சிறிது தூரம் சென்று யாரும் இல்லாத இடத்தில் எனது வாகனத்தை மறித்து பிரச்சினை செய்து மன உளைச்சல் ஏற்படுத்தி உள்ளார்.
தலைகவசம் அணிய சொன்னது ஒரு குற்றமா? தமிழக டி.ஜி.பி. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.