கடைகளில் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்
- சட்ட முறை எடையளவுகள் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் ஆய்வு.
- கூடுதல் விலைக்கு விற்கும் கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
சென்னை:
சென்னை 3-வது வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) நீலகண்டன் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தொழிலாளர் துறை ஆய்வாளர்கள் சவுகார்பேட்டை, பெரியமேடு, பெரம்பூர், வில்லிவாக்கம், புரசைவாக்கம், எழும்பூர் ஆகிய இடங்களில் சட்ட முறை எடையளவுகள் (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் ஆய்வு செய்தபோது முறையான அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்வது மற்றும் அதிகபட்ச சில்லரை விற்பனையை விட கூடுதல் விலைக்கு விற்பது போன்ற முரண்பாடுகள் காணப்பட்ட பொட்டலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது சட்டப்படியான அறிவிப்புகள் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டமுறை எடையளவுகள் (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் பதிவுச் சான்று பெறாத பொட்டலமிடுபவர், இறக்குமதியாளர்களுக்கு மற்றும் உரிய அறிவிப்புகள் இல்லாத மற்றும் அதிகபட்ச சில்லரை விற்பனையை விட கூடுதல் விலைக்கு விற்கும் கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.