தமிழ்நாடு

சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட சுகாதாரத்துறையினர்.


கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு- கோவையில் 13 சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

Published On 2022-07-20 05:53 GMT   |   Update On 2022-07-20 09:21 GMT
  • கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • போலீசார், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் அங்கு வெளிநாட்டில் இருந்து வந்த 2 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே கேரளாவில் இருந்து கோவை வரும் வாகனங்கள் தீவிர சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டி உள்ள 13 சோதனைச்சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது.

அங்கு போலீசார், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை வாளையார், வேலந்தாவலம், பொள்ளாச்சியில் உள்ள 2 சோதனைச்சாவடிகள், வால்பாறை, ஆனைக்கட்டி, ஆனைமலை ஆகிய பகுதிகளில் உள்ள 13 முக்கிய சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கேரளாவில் இருந்து கோவை வருபவர்களுக்கு கொரோனா அறிகுறி மற்றும் குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் உள்ளதா? என சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் சோதனை நடத்தப்படுகிறது.

அறிகுறிகளுடன் யாராவது வந்தால் அவர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோவை மாவட்டம் வால்பாறைக்கு கேரள மாநிலம் சாலக்குடியில் இருந்து மளுக்கம்பாறை வழியாக வரும் வாகனங்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கேரளாவில் இருந்து வருபவர்களின் கை, கால் மற்றும் உடலில் கொப்புளங்கள் உள்ளதா? என்று பரிசோதனை செய்யப்படுகிறது. உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் வாகன ஓட்டுனர்களின் உரிம எண், செல்போன் எண், வாகனங்களின் பதிவு எண் ஆகியவற்றை பதிவு செய்த பின்னரே அவர்கள் வால்பாறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சேக்கல் முடி சோதனைச்சாவடியில் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாபுலட்சுமண் தலைமையில் சோலையாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று முதல் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் பாலு கூறியதாவது:-

வால்பாறை பகுதியில் உள்ள பொதுமக்கள் பலரும் கேரளாவிற்கு அடிக்கடி சென்று வரக்கூடிய நிலை உள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த தனியார் பஸ் தினந்தோறும் கேரள மாநிலம் சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு வந்து செல்கிறது. தற்போது கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் கவனமாக இருக்கவேண்டும்.

யாருக்காவது நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News