குறுஞ்செய்தி வந்தால் பதட்டப்பட வேண்டாம்: 1930 எண்ணில் புகார் அளிக்க மின்வாரியம் வேண்டுகோள்
- பொதுமக்களில் பலர் பதட்டமாகி சம்பந்தப்பட்ட லிங்க்கில் சென்று பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
- உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு தகவலை பகிரவும்.
சென்னை:
பொது மக்களின் செல்போன் எண்களுக்கு மின் வாரியத்தில் இருந்து அனுப்புவது போல போலியான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது.
இதைபார்த்து குறுஞ்செய்தியின் லிங்க்கில் சென்று பார்த்தால் வங்கி கணக்கில் இருந்து பணத்தை பறிக்கும் வகையில் மர்மநபர்கள் இந்த குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறார்கள். இதனால் பொதுமக்களில் பலர் பதட்டமாகி சம்பந்தப்பட்ட லிங்க்கில் சென்று பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இதையடுத்து தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் மின்வாரிய இணையதளத்தில் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் செய்ய வேண்டியது என்ன? என்கிற தலைப்புடன் 6 அறிவுரைகள் அதில் இடம்பெற்றுள்ளன.
மின் கட்டணம் கட்டவில்லை என்று குறுஞ்செய்தி வந்தால் பதட்டம் அடைய வேண்டாம்.
உங்கள் மின் கட்டண ரசீதின் தற்போதைய நிலை என்ன என்பது பற்றி இணைய தளத்தில் சென்று சரிபாருங்கள். குறுஞ்செய்தியில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம். அதில் இடம்பெற்றுள்ள லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம்.
உடனடியாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1930- ஐ அழைத்து புகார் அளிக்கவும்.
உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இந்த தகவலை பகிரவும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.