தமிழ்நாடு

எழும்பூரில் புழல் ரவுடி ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை

Published On 2023-09-11 07:26 GMT   |   Update On 2023-09-11 07:26 GMT
  • கொலையாளிகள் 5 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே ஏறி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
  • கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை:

புழல், அடுத்த காவாங்கரை, 15-வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் சத்யா(வயது22). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்ளது.

நேற்று இரவு அவர் சென்னை எழும்பூருக்கு வந்திருந்தார். பின்னர் நண்பர்களுடன் பாண்டியத் ரோட்டில் உள்ள ஜூஸ் மற்றும் டீக்கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது 5 பேர் கும்பல் இரண்டு மோட்டார் சைக்கிளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சத்யாவை சுற்றி வளைத்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சத்யா தப்பி ஓட முயன்றார். ஆனால் மர்ம கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினார்கள் . இதில் கழுத்து, வாய், காது உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சத்யா ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பலியானார்.

கொலையாளிகள் ரவுடி சத்யாவை வெட்டி கொலை செய்வதை கண்டு அவ்வழியே சென்று பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கொலையாளிகள் 5 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே ஏறி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் எழும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. கொலையாளிகள் யார்? எதற்காக அவர்கள் சத்யாவை கொலை செய்தனர்? என்பது பற்றி எழும்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் மாதவரம் பகுதியை சேர்ந்த நாய் ரமேஷ் என்பவர் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் ரவுடி சத்யா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேசின்பிரிட்ஜ் அருகே நாய் ரமேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது கொலையுண்ட சத்யா குற்றவாளியாக இருந்தார். இந்த மோதலின் தொடர்ச்சியாக சத்யா கொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டினப்பாக்கம் பகுதியில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டிருந்தார்.இந்த நிலையில் சென்னை மாநகரின் முக்கிய பகுதியான எழும்பூர் பாந்தியன் சாலையில் வைத்து ரவுடி சத்யா கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து சென்னை மாநகரில் வெளியூர்களில் இருந்து வந்து ஒதுங்கி இருக்கும் ரவுடிகளைகளை ஒடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார். போலீசார் தங்களது பகுதியில் பதுங்கியுள்ள ரவுடிகளை பிடிக்க தீவிர வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

Similar News