தமிழ்நாடு

திண்டுக்கல் அருகே விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

Published On 2022-09-09 08:03 GMT   |   Update On 2022-09-09 08:03 GMT
  • திண்டுக்கல் மாவட்டம் சிங்காரக்கோட்டை அருகில் உள்ள சின்னரெட்டியபட்டியை சேர்ந்தவர் வேல்முருகன்.
  • வேல்முருகனுக்கு இடப்பிரச்சினை மற்றும் சொத்து தகராறு காரணமாக ஒருசிலரிடம் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் சிங்காரக்கோட்டை அருகில் உள்ள சின்னரெட்டியபட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் (55). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர்.

இவரது மனைவி பெங்களூரில் மகள் வீட்டில் வசித்து வருகிறார். வேல்முருகன் விவசாய நிலங்களை கவனித்து தனியாக களத்து வீட்டில் தங்கியுள்ளார். இன்று அதிகாலை அவர் தூங்கிக்கொண்டிருந்த கட்டிலின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

இந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு வேல்முருகன் எழுந்தார். ஆனால் அவருக்கு எந்தவித காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கட்டிலின் ஒருபகுதி மற்றும் போர்வை தீயில் எரிந்தது. வீட்டு சுவர் முன்பு தீப்பிடித்ததால் உடனடியாக அதனை அணைத்துவிட்டார். இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு வேல்முருகன் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. துர்காதேவி தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்தும் அவரது வீட்டில் வீசப்பட்டது எந்தவகையான வெடிகுண்டு என விசாரணை நடத்தி வருகின்றனர். வேல்முருகனுக்கு இடப்பிரச்சினை மற்றும் சொத்து தகராறு காரணமாக ஒருசிலரிடம் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அவர்கள் வெடிகுண்டு வீசியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.

அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News