தமிழ்நாடு

பெரம்பூர் ரெயில் நிலையத்தில் ஆந்திர வாலிபர்களிடம் ரூ.1½ கோடி பறிமுதல்- போலீசார் விசாரணை

Published On 2022-09-30 07:10 GMT   |   Update On 2022-09-30 07:10 GMT
  • போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பெரம்பூர்:

சென்னைக்கு வட மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்களில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க பெரம்பூர் ரெயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.

இன்று காலை சென்னை நோக்கி வந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் இருந்து இறங்கிய பயணிகளை மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசார் கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக பையுடன் வந்த 2 வாலிபர்களிடம் விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது கட்டுக்கட்டாக ரூ.1½ கோடி ரொக்கம் இருந்தது.

விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அபிஷேக், சுராஜ் என்பதும் நகை வியாபாரிகளான அவர்கள் சவுகார்பேட்டையில் நகை வாங்குவதற்கு பணத்தை கொண்டு வந்ததாகவும் தெரிவித்தனர்.

ஆனால் அவர்களிடம் பணத்திற்கான ஆவணம் எதுவும் இல்லை. இதையடுத்து ரூ.1½ கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செம்பியம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது பற்றி வருமான வரித்துறையினரும் தனியாக விசாரித்து வருகிறார்கள்.

Similar News