கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
- எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை வீரர்கள் ராமேசுவரம் மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.
- இலங்கை கடற்படையின் அச்சத்தால் முழுமையாக மீன்பிடிக்க முடியவில்லை.
ராமேசுவரம்:
ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட 420 விசைப்படகுகளில் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். இவர்களில் ஒருதரப்பினர் கச்சத்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சிறிய கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களிடம் இந்த பகுதியில் மீன்பிடிக்க அனுமதி இல்லை. எனவே இங்கிருந்து புறப்பட்டு வேறு இடத்திற்கு செல்லுங்கள் என எச்சரித்தனர். மேலும் சில வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களின் வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதோடு பிடித்து வைத்திருந்த மீன்களையும் எடுத்து சென்றனர்.
தொடர்ந்து எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை வீரர்கள் ராமேசுவரம் மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் உயிருக்கு பயந்து பாதியிலேயே அவசரமாக கரை திரும்பினர். இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில்,
கடந்த வாரம் சூறாவளி காற்று காரணமாக கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் வாழ்வாதாரம் பாதிப்பட்டிருந்த நிலையில் கடல்காற்று குறைந்து கடந்த சில நாட்களாக தான் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை கடற்படையின் அச்சத்தால் முழுமையாக மீன்பிடிக்க முடியவில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் ஒரு படகுக்கு ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுகிறது என கவலையுடன் தெரிவித்தனர்.