சர்ச்சுக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை- பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது
- பாதிரியார் தேவாலயங்களுக்கு வரும் 3 சிறுமிகள் மற்றும் ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
- சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளானது குறித்து மண்டபம் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் நல அதிகாரிகள் புகார் அளித்தனர்.
ராமநாதபுரம்:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்தவர் ஜான் ராபர்ட்(வயது45). இவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான தோணித்துறை, வலையர்வாடி, மரவெட்டிவலசை ஆகிய பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார்.
இவர் தேவாலயங்களுக்கு வரும் 3 சிறுமிகள் மற்றும் ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள், குழந்தைகள் நல அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் குழந்அதைகள் நல அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தேவாலயங்களுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் புகார் கொடுத்த சிறுமிகளிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அதில் பாதிரியார் ஜான் ராபர்ட் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளானது குறித்து மண்டபம் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் நல அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார் ஜான் ராபர்ட் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
தேவாலயங்களுக்கு வழிபாட்டுக்கு வந்த சிறுமிகளுக்கு பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மண்டபம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.