தமிழ்நாடு

வருசநாடு அருகே ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தையால் மக்கள் பீதி

Published On 2022-06-24 08:38 GMT   |   Update On 2022-06-24 08:38 GMT
  • கடந்த 10 நாட்களுக்கு முன்பு குமணன்தொழு பகுதியில் விவசாயிக்கு சொந்தமான ஆடுகளை சிறுத்தை அடித்து கொன்றது.
  • தொடர்ந்து ஆடுகள் உயிரிழந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வருசநாடு:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகில் உள்ள மேகமலை அடிவார பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் உள்ளே புகுந்து ஆடுகள் மற்றும் கால்நடைகளை அடித்து கொன்று வருவது வாடிக்கையாக உள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு குமணன்தொழு பகுதியில் விவசாயிக்கு சொந்தமான ஆடுகளை சிறுத்தை அடித்து கொன்றது. நேற்று இரவு இதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரது 3 ஆடுகளை சிறுத்தை அடித்து கொன்றது.

இன்று காலையில் இறந்து கிடந்த ஆடுகளை பார்த்து விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், இங்கு சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து ஆடுகள் உயிரிழந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆடுகளை அடித்து கொல்வது சிறுத்தையா? அல்லது புலியா? எனவும் தெரியவில்லை. செந்நாய் அடித்து கொன்றிருந்தால் எலும்புகளை உண்ணாது. தற்போது இறந்து கிடக்கும் ஆடுகளின் எலும்புகளும் மாயமாகி இருப்பதால் சிறுத்தையாகத்தான் இருக்கும் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எனவே இப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை வைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை அறிவதுடன் அதனை பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே சிறுத்தை அடித்து கொன்றதாக கூறப்படும் பகுதியில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News