தமிழ்நாடு

ஏற்காட்டில் கொட்டிய கன மழை

Published On 2022-07-08 05:13 GMT   |   Update On 2022-07-08 05:13 GMT
  • மழையை தொடர்ந்து ஏற்காட்டில் மின் தடை ஏற்பட்டது.
  • மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது . அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.

குறிப்பாக ஏற்காட்டில் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை 2 மணி நேரம் கன மழையாக கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து ஏற்காட்டில் மின் தடை ஏற்பட்டது . இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்சன் உள்பட அனைத்து பகுதிகளிலும் 4 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 35.2 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் 24.3, காடையாம்பட்டி 13, ஆத்தூர் 7, பெத்த நாயக்கன்பாளையம் 7, கெங்கவல்லி 7, தம்மம்பட்டி 5, ஓமலூர் 3, ஆனைமடுவு 3, வீரகனூர் 2, கரியகோவில் 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 108.5 மி.மீ. மழை பெய்துள்ளது.

Tags:    

Similar News