கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து 3 மணி நேரம் தாமதம்
- கன்னியாகுமரியில் கடல் சீற்றம்-கொந்தளிப்பு ஏற்படுவது கடந்த 2 நாட்களாக அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
- மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
கன்னியாகுமரி:
வங்கக்கடல் பகுதியில் கடல் நீர்மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள்வாங்குவதும் இந்தியப்பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றம்-கொந்தளிப்பு ஏற்படுவதும் கடந்த 2 நாட்களாக அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
இன்று காலையும் இதே நிலை காணப்பட்டதால் கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் பகல் 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர். கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.