தமிழ்நாடு
வன்முறை, தீவிரவாதத்தை வேருடன் அழிக்க ராஜீவ் நினைவு நாளில் உறுதிமொழி ஏற்போம்- விஜய் வசந்த்
நாட்டின் எழுச்சிக்காக நமது மண்ணில் இரத்தம் சிந்தி தன்னையே இந்த நாட்டுக்காக தியாகம் செய்த ராஜீவ் காந்தியை என்றும் மறவோம் என விஜய் வசந்த் கூறி உள்ளார்.
கன்னியாகுமரி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தியதுடன், அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அவ்வகையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியிருப்பதாவது:-
முன்னாள் பாரதப் பிரதமர் அருமைத் தலைவர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அவரது தியாகத்தை நினைவுகூர்ந்து போற்றுவோம்.
இன்று நாம் வாழும் நவீன இந்தியாவை செதுக்கியவர் ராஜீவ் காந்தி. விஞ்ஞானம், தொழில் நுட்பம் மகளிர் சம உரிமை, அதிகாரப் பரவலாக்கம் என தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியாவை ஆளுமை மிகுந்த தேசமாக மாற்ற நடவடிக்கை எடுத்தவர் நமது தலைவர் ராஜீவ் காந்தி. நமது நாட்டின் எழுச்சிக்காக நமது மண்ணில் இரத்தம் சிந்தி தன்னையே இந்த நாட்டுக்காக தியாகம் செய்த அருமை தலைவர் ராஜீவ் காந்தியை என்றும் மறவோம். வன்முறையையும் தீவிரவாதத்தையும் நமது நாட்டிலிருந்து வேருடன் அழிக்க உறுதிமொழி ஏற்போம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.