தமிழ்நாடு
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29 ஆயிரத்து 72 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2022-05-19 04:57 GMT   |   Update On 2022-05-19 04:57 GMT
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர்:

ஒகேனக்கல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லில் நேற்று காலை 25 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரியில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் வருகிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 9 ஆயிரத்து 546 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 29 ஆயிரத்து 72 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நேற்று காலை 109.46 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் ஒன்றரை அடி உயர்ந்து 111.10 அடியானது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News