தமிழ்நாடு
அரிச்சல்முனையில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன

வங்கக்கடலில் புயல் சின்னம்- தனுஷ்கோடி பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றம்

Published On 2022-05-12 06:10 GMT   |   Update On 2022-05-12 06:10 GMT
தனுஷ்கோடி, ராமேசுவரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
ராமேசுவரம்:

வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

மன்னார் வளைகுடா பாக்ஜலசந்தி கடலோரப் பகுதிகளான தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கடும் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

இதன் காரணமாக கடல் அலைகள் பெரிதாக அடித்து வருகிறது. தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இன்றும் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. அலைகள் பெரிதாக எழுந்து கரையில் இருந்த பாறைகளில் ஆக்ரோஷமாக மோதியது.

கடல் சீற்றத்துடன் இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் ஏற்கனவே கடலுக்கு செல்லாமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடல் சீற்றம் காரணமாக நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தனுஷ்கோடி, ராமேசுவரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அவர்களது படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.


Tags:    

Similar News