தமிழ்நாடு
கொடநாடு பங்களா

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகி சகோதரர் சுனிலிடம் விசாரணை

Published On 2022-05-06 09:57 GMT   |   Update On 2022-05-06 09:57 GMT
கொடநாட்டில் கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்றபோது, கூடலூரில் போலீசில் சிக்கியவர்களை இவர் பேசி அனுப்பி வைத்ததாக அந்த சமயம் தகவல் பரவியது. இது தொடர்பாகவும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கோவை:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த வழக்கு தொடர்பாக தற்போது மறு விசாரணை நடந்து வருகிறது.

மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான 5 தனிப்படை போலீசார் இந்த வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தினந்தோறும் ஒருத்தரிடம் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை 220க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் கொடநாடு பங்களாவில் இருந்த ஆவணங்கள் என்ன, கொள்ளை போன பொருட்கள் எவை என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று இந்த வழக்கில் 6வது குற்றவாளியான பிஜின்குட்டியின் சகோதரர் மோசஸ் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொடநாடு பங்களாவில் மர வேலைப்பாடுகள் பார்த்த சஜீவன் மற்றும் அவரது சகோதரர் சிபி ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் சஜீவனின் மற்றொரு சகோதரரான சுனிலிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்மன் அனுப்பினர்.

அவர் இன்று காலை கோவை போலீஸ் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை பற்றியும், கொள்ளையடித்து சென்றவர்களுடன் இவருக்கு ஏதாவது தொடர்பு உண்டா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்தனர்.

கொடநாட்டில் கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்றபோது, கூடலூரில் போலீசில் சிக்கியவர்களை இவர் பேசி அனுப்பி வைத்ததாக அந்த சமயம் தகவல் பரவியது. இது தொடர்பாகவும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News