தமிழ்நாடு
உடன்குடியில் தேங்கி கிடக்கும் முருங்கைக்காய்

ஆடு, மாடுகளுக்கு தீவனமாக போடப்படும் முருங்கைக்காய்

Published On 2022-04-17 04:31 GMT   |   Update On 2022-04-17 04:31 GMT
முருங்கைக்காய் பச்சை நிறத்தில் பளிச் என மாறும் வரை வெளியூருக்கு ஏற்றுமதி செய்ய முடியாது. அதுவரை விலையும் கூடாது என்று கமி‌ஷன் கடைக்காரர்கள் கூறுகிறார்கள்.
உடன்குடி:

உடன்குடி வட்டார பகுதியில் தற்போது முருங்கை விவசாயம் அதிக அளவில் நடந்தது.

முருங்கை வேகமாக வளர்ந்து வந்து, பல இடங்களில் கொத்துக்கொத்தாய் காய்க்கும் சீசன் வந்துவிட்டது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு கோடைமழை பெய்ததால் முருங்கைக்காய் எல்லாம் பழுப்பு நிறம் கலந்த கருப்பு நிறமாக மாறிவிட்டது.

இதனால் இந்த முருங்கைக்காய்களை வெளி ஊர்களுக்கு ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டது, உடன்குடி பகுதியில் உள்ள கமி‌ஷன் கடையில் தற்போது பழுப்பு நிற முருங்கைக்காய் ரூ.10-க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். இதை யாரும் வாங்குவதும் இல்லை. வெளியூருக்கு அனுப்பவும் முடியவில்லை.

அதனால் ஆங்காங்கே கமி‌ஷன் கடைகளில் முருங்கைக்காய் தேங்கி கிடக்கிறது. இதனால் ஆடு, மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. சிலர் தோட்டங்களில் காய்களை பறிக்காமல் போட்டு விட்டனர்.

இன்னும் சில தோட்டங்களில் முருங்கைக்காய் வேண்டும் என்றால் நீங்களே எங்க தோட்டத்தில் வந்து இலவசமாக பறித்து செல்லுங்கள் என்று கூறுகிறார்கள்.

முருங்கைக்காய் பச்சை நிறத்தில் பளிச் என மாறும் வரை வெளியூருக்கு ஏற்றுமதி செய்ய முடியாது. அதுவரை விலையும் கூடாது என்று கமி‌ஷன் கடைக்காரர்கள் கூறுகிறார்கள்.



Tags:    

Similar News