தமிழ்நாடு
திருநங்கையிடம் பணம் பறித்த 3 போலீசார் சஸ்பெண்டு

திருநங்கையிடம் பணம் பறித்த 3 போலீசார் சஸ்பெண்டு- போலீஸ் கமி‌ஷனர் உத்தரவு

Published On 2022-04-07 09:34 GMT   |   Update On 2022-04-07 09:34 GMT
கே.கே.நகரில் திருநங்கையிடம் பணம் பறித்த 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.
போரூர்:

சென்னை, அசோக் நகர் 100அடி சாலையில் கடந்த 31-ந் தேதி நள்ளிரவு சிலர் ரகளையில் ஈடுபடுவதாக திருநங்கைகள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அசோக் நகர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது திருநங்கைகள் மற்றும் உடன் இருந்த வாலிபரிடம் கே.கே நகர் போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வரும் போலீஸ்காரர்கள் முருகன், மாரிமுத்து, நாராயணன், மணிகண்டன், பாண்டியன் மற்றும் குமரன் நகர் போலீஸ் நிலைய ஏட்டு சசிகுமார் ஆகியோர் பணம் கேட்டு மிரட்டி ரகளையில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் 6 பேரும் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களிடம் துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் திருநங்கைகளிடம் பணம் பறித்த போலீஸ்காரர்கள் சசிகுமார், முருகன், பாண்டியன் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.
Tags:    

Similar News