தமிழ்நாடு
வாக்குப்பதிவு எந்திரம்

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் 9.13 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை

Published On 2022-02-21 06:55 GMT   |   Update On 2022-02-21 06:55 GMT
கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி என மொத்தம் 23 லட்சத்தும், 34 ஆயிரத்து 294 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 14 லட்சத்து 21 ஆயிரத்து 187 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
கோவை:

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட அளவில் 59.61 சதவீதம் வாக்குகள் பதிவானது. 40.39 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை. கோவை மாநகராட்சியில் 53.61 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்தனர். ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகமாக வாக்களித்து இருந்தனர்.

வாக்குகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது தேர்தல் கமி‌ஷன் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாக்கு சதவீதம் குறைய நோட்டா பட்டன் இல்லாமல் இருந்தது முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சில வாக்காளர்கள் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் என நினைத்து வேலைகள் முடிந்த பின்னர் வாக்களிக்க ஆர்வமுடன் சென்றனர். ஆனால் மாலை 5 மணிக்கு பின்னர் யாரும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

மாவட்ட அளவில் அரசியல் கட்சியினர் அதிக வாக்குகளை வாங்க பணம் மற்றும் பரிசு பொருட்களை வாரி இறைத்தனர். ஆனால் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. நடுநிலை வாக்காளர்கள் பணம், பரிசு பொருட்கள் விநியோகத்தால் ஏற்பட்ட அதிருப்தியில் வாக்களிக்க வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் வெளியூர்களுக்கு வேலைக்கு சென்ற வாக்காளர்கள் வாக்களிக்க வராததால் வாக்கு சதவீம் குறைந்ததாக கூறப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி என மொத்தம் 23 லட்சத்தும், 34 ஆயிரத்து 294 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 14 லட்சத்து 21 ஆயிரத்து 187 பேர் மட்டுமே வாக்களித்தனர். 9 லட்சத்து 13 ஆயித்து 107 பேர் வாக்களிக்க வில்லை.

Tags:    

Similar News