தமிழ்நாடு
மேட்டூரில் பேக்கரியில் வேலை செய்த குழந்தை தொழிலாளர் மீட்பு
மேட்டூரில் பேக்கரியில் வேலை செய்த குழந்தை தொழிலாளரை அதிகாரிகள் மீட்டனர்.
சேலம்:
மேட்டூர் ராமன்நகர் பகுதியில் ஒரு தனியார் பேக்கரியில் குழந்தை தொழிலாளர் பணிபுரிவதாக சேலம் மாவட்ட கலெக்டருக்கு தகவல் வந்தது.
இதை தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சி.முத்து தலைமையில் அதிகாரிகள் மற்றும் தேசிய குழந்தை திட்ட இயக்குனர், சைல்டு லைன் அமைப்பினர், குழந்தை பாதுகாப்பு பணியாளர்கள் அந்த பேக்கரியில் அதிரடி ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு வேலை செய்த சிறுவனை மீட்டனர். பின்பு அவன் சேலம் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டான். சிறுவனை வேலைக்கு அமர்த்திய பேக்கரி உரிமையாளர் மீது குழந்தை தொழிலாளர் சட்ட விதிகளின்படி வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.
மேலும் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தக்கூடாது என்றும் அவ்வாறு அமர்த்தினால் குறைந்தபட்ச அபராதம் ரூ.20 ஆயிரமும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கபப்டும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.