மதுரையில் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: துப்புரவு தொழிலாளி கைது
மதுரை:
மதுரை பகுதியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாநகர போலீசுக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.
அதன்படி மாநகர துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில், கூடுதல் உதவி கமிஷனர் அக்பர்கான் ஆலோசனைபேரில், மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை முத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 60). துப்புரவு தொழிலாளியாக உள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 3 நாட்களாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று 6-ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்தார். அந்த சிறுமியை வாயை பொத்தி தனி அறைக்கு தூக்கி வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அந்த சிறுமி ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று குரல் எழுப்பி உள்ளார்.
இதனால் பயந்துபோன மகாலிங்கம், அந்த சிறுமியிடம், ‘இங்கு நடந்ததை வெளியே சொல்லக்கூடாது, அப்படிச் சொன்னால் உயிரோடு கொன்று விடுவேன்’ என்று மிரட்டி விட்டு தப்பிச்சென்றார். இதையடுத்து அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டுக்கு திரும்பி உள்ளார்.
அழுதபடி வந்த சிறுமியிடம் தாய் விசாரித்து உள்ளார். அப்போது அந்த சிறுமி நடந்த விஷயங்களை தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அது தொடர்பாக மாநகர போலீசாருக்கு புகார் கொடுத்தார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அந்த சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளானது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மகாலிங்கத்தை மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் 6-ம் வகுப்பு மாணவிக்கு துப்புரவு தொழிலாளி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.