தமிழ்நாடு
மேட்டூர் அணை

42 நாட்களுக்கு பின்னர் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைய தொடங்கியது

Published On 2021-12-24 04:11 GMT   |   Update On 2021-12-24 04:11 GMT
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. இன்று காலை நீர் வரத்து விநாடிக்கு 4 ஆயிரத்து 953 கன அடியாக இருந்தது.
மேட்டூர்:

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்துள்ளது. இதனால் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தேவை குறைந்தது. இதன் காரணமாக அக்டோபர் 10-ந் தேதி முதல் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது.

அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததன் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 13-ந் தேதி இரவு மேட்டூர் அணை 120 அடியை எட்டி நிரம்பியது. இதனைத்தொடர்ந்து அணைக்கு வரும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. இன்று காலை நீர் வரத்து விநாடிக்கு 4 ஆயிரத்து 953 கன அடியாக இருந்தது.

இந்த நிலையில் டெல்டா பாசன பகுதியில் மழை இல்லாததால் பாசனத்திற்கு தண்ணீர் தேவை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இன்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதமும் கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கி உள்ளது. 42 நாட்களாக 120 அடியாக நீடித்த நீர்மட்டம் தற்போது குறைய தொடங்கி உள்ளது.

எனினும் மேட்டூர் அணை தொடர்ந்து கடல் போல காட்சி அளிக்கிறது. அணைக்கு வரும் தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News