தமிழ்நாடு
கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சரண்யா மற்றும் மகள் கனிஷ்கா.

2 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று தாய் தற்கொலை

Published On 2021-12-07 04:18 GMT   |   Update On 2021-12-07 04:18 GMT
குளித்தலை அருகே இளம்பெண் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குளித்தலை:

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள செம்பியநத்தம் கிராமம் பூசாரிபட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 35) டெய்லர். இவரது மனைவி சரண்யா(வயது 30). இந்த தம்பதியருக்கு கனிஷ்கா(6) , புதிஷா(3) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.

நேற்று இரவு சக்திவேல் நாச்சிமுத்துபாளையம் என்ற கிராமத்தில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டார். வீட்டில் சரண்யா மற்றும் குழந்தைகள் தனியாக இருந்தனர்.

இந்த நிலையில் சரண்யா திடீரென நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த இரு குழந்தைகளையும் தட்டி எழுப்பியுள்ளார்.

பின்னர் கணவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் 2 குழந்தைகளையும் தள்ளி கொன்றுவிட்டு தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்ததாக கூறப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சரண்யா மற்றும் மூத்த மகள் கனிஷ்கா ஆகியோரை பிணமாக மீட்டனர். புதிஷாவை காணவில்லை.

இந்த கிணறு 50 அடி ஆழத்தில் உள்ளது. இதில் 30 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. இதையடுத்து 2 மின்மோட்டார்களை வைத்து தண்ணீரை வெளியேற்றி அந்த குழந்தையை தேடும் பணி நடந்தது.

இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குடும்ப பிரச்சனை காரணமாக சரண்யா 2 குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே சமீபகாலமாக சரண்யா ஒருவித மன இறுக்கத்துடன் இருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதனால் துயரமுடிவை எடுத்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பல கோணங்களில் விசாரணை நடப்பதாக தெரிவித்தனர்.
Tags:    

Similar News