செய்திகள்
துர்கா ஸ்டாலினுக்கு, செல்வமுத்துக்குமாரசுவாமி படம் மற்றும் கோவில் பிரசாதங்களை தருமபுரம் ஆதீனம் வழங்கினார்.

வைத்தீஸ்வரன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

Published On 2021-09-22 03:59 GMT   |   Update On 2021-09-22 03:59 GMT
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து சுவாமி, அம்மன், செல்வமுத்துக்குமார சுவாமி, அங்காரகன் ஆகிய சன்னதிகளில் தரிசனம் செய்தார்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில் செல்வ முத்துக்குமாரசுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகள் அருள் பாலிக்கின்றனர். பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு வாரந்தோறும் செவ்வாய் கிழமை தருமபுரம்ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வந்து தரிசனம் செய்து, கோவிலில் அடி பிரதட்சணம் செய்வது வழக்கம். அதன்படி தருமபுரம் ஆதீனம் நேற்று செவ்வாய்கிழமை வழிபாடு செய்தார்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து சுவாமி, அம்மன், செல்வமுத்துக்குமார சுவாமி, அங்காரகன் ஆகிய சன்னதிகளில் தரிசனம் செய்தார். பின்னர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானத்திடம், துர்கா ஸ்டாலின் ஆசிபெற்றார்.

அவருக்கு தருமபுரம் ஆதீனம் கோவில் பிரசாதங்கள் மற்றும் செல்வமுத்துக்குமார சுவாமி படம் ஆகியவற்றை வழங்கி அருளாசி வழங்கினார். அப்போது வைத்தீஸ்வரன் கோவில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் உடனிருந்தார்.
Tags:    

Similar News