search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துர்கா ஸ்டாலின்"

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடை பெறுகிறது.
    • தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடை பெறுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் வீடு வீடாக அழைப்பிதழ் மற்றும் அட்சதை பிரசாதம் வழங்கி அழைத்து வருகிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினை ஆர்.எஸ்.எஸ். மற்றும் விசுவ இந்து பரிசத் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பாக 22-ந்தேதி நடை பெறும் கும்பாபிஷேக அழைப்பிதழையும், ராமருக்கு பூஜை செய்த அட்சதையையும் வழங்கினார்கள்.

    அவரும் பக்தியுடன் பெற்றுக் கொண்டு விரைவில் தரிசனம் செய்ய வருவதாக தெரிவித்து உள்ளார்.

    தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படுகிறது. பொங்கல் திருநாளான நாளை (15-ந்தேதி) வரை இந்த பணிகள் நடக்கிறது.

    • நோய் கிருமிகளை எதிர்த்து நாம்தான் போராடியாக வேண்டும்.
    • சாதி, மதத்தின் பெயரால் நாட்டை நாசம் செய்ய நினைக்கும் ஒரு கூட்டத்துக்கு எதிராக நாம் மோதிக் கொண்டிருக்கிறோம்.

    சென்னை:

    தி.மு.க. சமூக வலைதள ஐ.டி.பிரிவு தன்னார்வலர்கள் கலந்து கொண்ட கூட்டம் சென்னை செனாய் நகரில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமூக ஊடகங்கள் மூலமாக மக்களை எளிதில் சென்றடைய முடியும்... அவர்களின் 'ரியாக்ஷன்' என்ன என்பதையும் தெரிந்துக் கொள்ள முடியும்.

    அவதூறு பரப்பி, திட்டி ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் வந்து விடுகிறது. நமது கருத்துக்கள் நொடியில் கோடிக்கணக்கான பேருக்கு போய் சேர்ந்து விடுகிறது. 'முரசே முழங்கு' நாடக வெற்றி விழா நிகழ்ச்சிக்கு போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த போது அதிகாலை 4 மணி இருக்கும். நோட்டீஸ் ஒட்டக் கூடாது என்று குறிப்பிட்டிருந்த கல்லூரி சுவற்றில் போய் போஸ்டரை ஒட்டி விட்டேன்.

    அதனால் என் மீது வழக்கும் போட்டார்கள். அப்போது முதலமைச்சர் மகன் நான். அப்போதைய நமது ஆட்சி அப்படி இருந்தது. இன்றும் அப்படி தான் உள்ளது. சமூக வலைதளங்களை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    திராவிட இயக்கம் தமிழர்கள் தலை நிமிர்வதற்காக பிறந்த இயக்கமாகும். யாருடைய தலையையும் எடுக்க பிறந்த இயக்கம் இல்லை. இன்று சீவிடுவேன் சீவிடுவேன் என்று சொல்கிறார்களே. அதற்காகத்தான் இதை சொல்கிறேன். வலை தளங்கள் ஒருவரை ஒரே நாளில் புகழின் உச்சிக்கு கொண்டு போய் சேர்க்கும். ஒருவர் பல காலம் கட்டமைத்த பிம்பத்தை சில நொடிகளில் உடைத்து விடும். நெகட்டிவ் பிரசாரங்கள் மூலமாக எதிரிகளை வீழ்த்துவதை விட பாசிட்டிவ் பிரசாரங்கள் மூலமாக நம்மை வளர்த்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும்.

    தன்னை யாரெல்லாம் எதிர்த்தார்கள் என்று தந்தை பெரியார் பட்டியல் போட்டு சொல்லி இருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் அன்று இருந்த தலைவர்கள், இயக்கங்கள் பத்திரிகைகள் என எல்லோராலும் எதிர்க்கப்பட்டவர் பெரியார்.

    அவர்களின் பெயரையெல்லாம் பட்டியல் போட்டால் பலரை உங்களுக்கு தெரியாது. ஆனால் பெரியார் இன்னும் வாழ்கிறார்.

    வாழ்க வசவாளர்கள் என்று கூறிக்கொண்டே எதிரிகளை வீழ்த்தியவர் பேரறிஞர் அண்ணா. கூட்டில் இருக்கிற புழுக்களைப் போல கொட்டப்பட்டு கொட்டப்பட்டு வளர்ந்தவன் நான்.

    எதிரிகளுக்கு மட்டுமே பதில் சொல்லிக்கொண்டிருந்தால் நான் வளர்ந்திருக்கவே முடியாது. யாருக்கெல்லாம் நன்மை செய்தேனோ அவர்களால் அதிகமாக தாக்கப்பட்டவன் என்று கலைஞர் கூறி உள்ளார்.

    இதெல்லாம் நமக்கான பாடங்கள். அதற்காக யாருக்கும் பதில் சொல்லக்கூடாது. எல்லா விமர்சனங்களையும் ஏற்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. குறை சொல்பவர்கள் எல்லா காலத்துக்கும் இருந்து உள்ளனர்.

    மருந்து கண்டுபிடித்து விட்டால் நோய் கிருமிகள் ஒழிந்து விடுமா என்ன? சமூகத்தை பின்நோக்கி இழுத்துக் கொண்டிருந்த நோய் கிருமிகளை ஒழிக்க உருவான மருந்துதான் திராவிட இயக்கம்.

    நோய் கிருமிகளை எதிர்த்து நாம்தான் போராடியாக வேண்டும். இன்னைக்கு சோசியல் மீடியாவும், சில மீடியாக்களும் அவர்கள் கண்ட்ரோலில் உள்ளது. அதனால் பொய் சொல்லவும், அவதூறு பரப்பவும் அவர்கள் தயங்குவது இல்லை.

    இதற்கு சரியான பதிலை நாம் சொல்ல வேண்டும். ராணுவத்தோட முன்கள வீரர்கள் மாதிரி கழகத்தோட முன்தள வீரர்கள் நீங்கள். களமும் தளமும் கை கோர்த்தால் தான் வெற்றி கிடைக்கும்.

    களத்தில் நிற்கும் வேட்பாளர்களுக்கு களமாடி வெற்றியை தேடி தருபவர்கள்தான் நீங்கள். இங்கு வந்துள்ள உங்களுக்கு பாலோவர்ஸ் எண்ணிக்கை 92 லட்சத்து 62 ஆயிரத்து 618. ஏறத்தாழ ஒரு கோடிக்கு பாலோவர்ஸ் வந்திருக்காங்க. தன்னலமற்ற செயல்பாட்டால் நீங்கள் கழகத்துக்கு கிடைத்திருக்கீங்க.

    தொண்டர்களின் உழைப்பு கழகத்துக்கு ரத்த நாளம் எனக்கு கலைஞர் சொல்லி இருக்கிறார். அதனால்தான் தலைமை கழகத்தில் இருந்து வெளியிடும் அறிக்கைகளுக்கு முன்பே உங்களிடமிருந்து ரியாக்ஷன் வந்து விடுகிறது. நாங்கள் சொல்ல முடியாததை சொல்ல தயங்குவதை உங்களால் சொல்ல முடியும்.

    அந்த வகையில் தி.மு.க.வுக்கு நீங்கள் மிகப்பெரிய பலம். ஏராளமான அரசியல் எதிரிகளை வெற்றி கண்ட வரலாறு நம்மோடது. கொம்பாதி கொம்பர்கள் என்று சொல்லப்பட்டவர்களை எல்லாம் எதிர்த்து நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்.

    இந்த இயக்கத்தை அழித்து விடலாம் என்று நினைத்தவர்களின் எண்ணம்தான் அழிந்து போயிருக்கிறது. தி.மு.க.வை கற்பனையில் கூட அழிக்க முடியாது. திராவிட இயக்கத்தை ஒழிப்பேன் என்று சொன்ன பலர் கடைசியில் இங்கேதான் அடைக்கலமாகி உள்ளனர்.

    மூதறிஞர் ராஜாஜியும், சிலம்பு செல்வர் ம.பொ.சி.யும் இந்த இயக்கத்தை எதிர்த்தவர்கள். ஆனால் 1967-ல் தி.மு.க.வை ஆதரித்தார் ராஜாஜி. மயிலாப்பூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார் ம.பொ.சி.

    அந்த தலைவர்களுக்கெல்லாம் மாற்று கொள்கை இருந்தது. ஆனால் இன்று பாரதிய ஜனதா, அ.தி.மு.க. போன்ற வெகுஜன விரோதிகளோடு நாம் மோதிக்கொண்டிருக்கிறோம். பாசிசத்துக்கு எதிராக நேரடியாக மோதிக்கொண்டிருக்கிறோம்.

    சாதி, மதத்தின் பெயரால் நாட்டை நாசம் செய்ய நினைக்கும் ஒரு கூட்டத்துக்கு எதிராக நாம் மோதிக் கொண்டிருக்கிறோம். பாரதிய ஜனதாவின் சாதித் தன்மை இந்தியாவுக்கே எதிரானதாகும். ஒட்டு மொத்த மனிதகுலத்துக்கே எதிரானது.

    இப்படிப்பட்ட பாசிசவாதிகள் ஒருபக்கம். இவர்களோட பாதம் தாங்கிகளாக இருந்து தமிழ்நாட்டை அடகு வைத்த அ.தி.மு.க. ஒரு பக்கம். கொள்கை என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் கொள்கையற்ற கூட்டம்தான் அ.தி.மு.க.

    இனி மேலும் பாரதிய ஜனதாவோடு இருந்தால் தமிழக மக்களால் மொத்தமாக புறக்கணிக்கப்படுவோம் என்று பயந்து உள்ளே வெளியே ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பாரதிய ஜனதாவும், அண்ணா பெயரால் கட்சி நடத்தி அதை பா.ஜனதாவிடம் அடகு வைத்த அ.தி.மு.க.வும், வேறு வேறு அல்ல. நாணயமில்லாத நாணயத்தின் இரு பக்கங்கள்.

    அரசியல் எதிரிகள் மீது மட்டுமல்ல ஊடகவியலாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் என எல்லோர் மீதும் பா.ஜனதா அத்துமீறல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

    அப்படிப்பட்ட சோசியல் வைரசைத்தான் நாம் துணிவோடு எதிர்த்து நிற்கிறோம். மிசா, தடா, பொடா எல்லாவற்றையும் பார்த்தாச்சு. மிரட்டல், உருட்டல் இதெல்லாம் நம்மை ஒன்றும் செய்யாது. பொய் மூட்டைகளையும் அவதூறுகளையும் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.

    ஹிட்லருக்கு ஒரே ஒரு கோயபல்ஸ்தான் இருந்தாரு. ஆனால் கோயபல்ஸ் எல்லாம் ஒன்று சேர்ந்து கட்சி ஆரம்பித்தால் எப்படி இருக்குமோ? அப்படித்தான் அந்த கூட்டம் உள்ளது. தம் பிடிச்சி அவர்கள் ஊதும் பொய் பலூனை உண்மை என்கிற ஊசியை வைத்து நாம் உடைத்து விடுவோம் என்கிற எரிச்சல் அவர்களுக்கு உள்ளது. பொய்களுக்கு பொய்கள் எப்போதுமே பதில் ஆகாது.

    போலியான பெருமைகள் நமக்கு தேவையில்லை. உண்மையான உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்தால் போதும். நமது செய்திகள் உண்மையானவையாக இருக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியினர் போல போலியானதாக இருக்கக் கூடாது. அவர்களுக்கு இப்போது ஒரே வேலை தான். எனது மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோவிலுக்கு போகிறார்னு பார்க்கிறார்கள்.

    அதை போட்டோ எடுத்து கோவிலுக்கு போகிறார் என பரப்புகிறார்கள். தமிழகத்தில் உள்ள எல்லா கோவிலுக்கும்தான் அவர் போய்க் கொண்டிருக்கிறார். அது அவரது விருப்பம்.

    அதனை நான் தடுக்க விரும்பவில்லை. தடுக்கவும் தேவையில்லை. நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரியே தவிர, ஆன்மிகத்துக்கு எதிரி இல்லை. கோவிலும் பக்தியும் அவரவர் உரிமை. அவரவர் விருப்பம். ஏராளமான போராட்டங்களை நடத்தி கோவில் வழிபாட்டு உரிமையை வாங்கி கொடுத்தது திராவிட இயக்கம்.

    கலைஞரின் பராசக்தி வசனம்தான் அவர்களுக்கு பதில். கோவில்கள் கூடாது என்பது அல்ல. கோவில்கள் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது.

    கோவிலையும், பக்தியையும் பாரதிய ஜனதா தனது அரசியலுக்கு பயன்படுத்த நினைக்கிறது. கோவில்களை இடித்துவிட்டதாக வாட்ஸ்அப்பில் பூகம்ப படங்களை போட்டு வதந்தி பரப்புகிறார்கள். 1000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திய ஆட்சிதான் நமது ஆட்சி. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்களை மீட்ட ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. அதனை புத்தகமாகவே அச்சிட்டு வெளியிட்டிருக்கிறோம். இதெல்லாம் அவர்களுக்கு பிடிக்கவில்லை.

    லைட் எரிந்தால் திருடனுக்குத்தான் பிடிக்காது. கோவிலை பராமரிப்பது மதவெறியை தூண்டி குளிர்காய நினைக்கும் அந்த கும்பலுக்கு பிடிக்கவில்லை. அதனால் உண்மைகளை தொடர்ந்து மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்.

    இந்தியா முழுவதும் அதனை எடுத்துச் சொல்வோம். இது தொடர்பாக நான் பேசிய பேச்சுக்கள் 2 பகுதியாக வந்துள்ளது. 20 லட்சம் பேர் அதனை பார்த்துள்ளனர். இது எத்தனை மாநாடுகளுக்கு சமம் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இப்படி நமது கருத்துக்கள் அனைவரையும் சென்றடைய சமூக வலைதளங்களில் நாம் அதிகம் கவனம் செலுத்துவோம்.

    இந்த சந்திப்பை ஏற்பாடு செய்த ஐ.டி.பிரிவு செயலாளர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் துணையாக இருப்பவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு வெளியிடப்பட்டுள்ள 'கலைஞர் 100' புத்தகத்தை படித்து அதன் மூலமாக எதிரிகளுக்கு பதிலடி கொடுங்கள். நாற்பதும் நமதே நாடும் நமதே.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • ரூ.2 லட்சம் மதிப்புள்ள சந்தனம் அரைப்பதற்கான பிரத்யேக எந்திரத்தை குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் வழங்கினார்.
    • குருவாயூர் கிருஷ்ணன் கோவில் நிர்வாகம் சார்பில் துர்கா ஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள பிரசித்திபெற்ற கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தார். தனது சகோதரி ஜெயந்தி மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் வந்த அவர், கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    பின்பு 32 பவுன்(256கிராம்) எடையுள்ள தங்க கிரீடத்தை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். அதனை கோவில் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். துர்கா ஸ்டாலின் காணிக்கையாக வழங்கிய தங்க கிரீடத்தின் மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும்.

    இதேபோல் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சந்தனம் அரைப்பதற்கான பிரத்யேக எந்திரத்தையும் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் வழங்கினார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • மலைக்கோவில் உட்பிரகாரம் வழியாக வலம் வந்து பின்னர் மூலவருக்கு நடந்த உச்சிகால பூஜையில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார்.
    • முருகப்பெருமானுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணிசாமி கோவில் செவ்வாய்க்கு உரிய அதிபதியாக விளங்கி வருகிறார். இங்கு வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    அதன்படி இன்று நடந்த பூஜையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா கலந்து கொண்டார். இதற்காக மதுரையில் இருந்து கார் மூலம் பழனிக்கு வந்த அவர் அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு வந்தார்.

    அவருடன் பழனி எம்.எல்.ஏ செந்தில்குமாரின் மனைவி மெர்சி செந்தில்குமார் வந்தார். மலைக்கோவில் உட்பிரகாரம் வழியாக வலம் வந்து பின்னர் மூலவருக்கு நடந்த உச்சிகால பூஜையில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது முருகப்பெருமானுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பூஜையில் துர்கா ஸ்டாலின் பங்கேற்று மனமுருக வழிபட்டார். அவருக்கு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. துர்கா ஸ்டாலின் பழனி கோவிலுக்கு வந்ததை அறிந்ததும் பக்தர்கள் அவருடன் கைகுலுக்கி வணக்கம் தெரிவித்தனர். மேலும் அவருடன் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

    • துர்கா ஸ்டாலின் ஏற்பாட்டின்படி அகோர மூர்த்தி சன்னதியில் மலர்களால் பூப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
    • துர்கா ஸ்டாலின் பூம்புகார் அருகே கீழபெரும்பள்ளத்தில் உள்ள குலதெய்வ கோவிலான அங்காளம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு பகுதியில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. காசிக்கு இணையான ஆறு கோயில் முதன்மையாக விளங்கும் இக்கோயிலில் அகோர மூர்த்தி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் தனது குடும்பத்தினருடன் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். இதேபோல் திரளான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட காவடிகளை எடுத்து வந்தனர்.

    இதனை தொடர்ந்து அகோரமூர்த்திக்கு பல்வேறு நறுமண பொருட்களால் 4 மணி நேரம் அபிஷேகம் நடந்தது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த விழாவையொட்டி துர்கா ஸ்டாலின் ஏற்பாட்டின்படி அகோர மூர்த்தி சன்னதியில் மலர்களால் பூப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    அதன் பின்னர் துர்கா ஸ்டாலின் பூம்புகார் அருகே கீழபெரும்பள்ளத்தில் உள்ள குலதெய்வ கோவிலான அங்காளம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

    • என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஓட்டலில் திரண்டிருந்தனர்.
    • இந்நிலையில் காலை 11 மணியளவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஓட்டலுக்கு வந்தார்.

    புதுச்சேரி:

    பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டலில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.யை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

    இதற்காக என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஓட்டலில் திரண்டிருந்தனர். இந்நிலையில் காலை 11 மணியளவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஓட்டலுக்கு வந்தார்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டல் லிப்டில் ஏறி அறைக்கு சென்ற அவர் 10 நிமிடத்துக்கு பின் மீண்டும் காரில் ஏறிச்சென்றுவிட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சிவக்குமார் வந்தார்.

    கும்பகோணத்தில் உள்ள கோவிலுக்கு செல்லும் வழியில் ஓட்டலுக்கு வந்து சென்றதாக தெரிகிறது.

    • ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் நேரில் சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
    • இதன்படி பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, இன்று புதுவைக்கு வந்தார்.

    புதுச்சேரி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவடைகிறது.

    புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. தேர்தலில் பா.ஜனதா கூட்டணி கட்சிகள் சார்பில் திரவுபதி முர்மு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகின்றனர்.

    ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் நேரில் சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    இதன்படி பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, இன்று புதுவைக்கு வந்தார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு காலை 11.40 மணிக்கு வந்தார். அவரை முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், சந்திரபிரியங்கா, பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.

    விமான நிலைய நுழைவு வாயிலில் புதுவை மாநில பா.ஜதா சார்பில் மங்கள இசையுடன் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்கிருந்து கார் மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கார்டு ஓட்டலுக்கு 12 மணிக்கு வந்தார். அங்கு பா.ஜனதா மகளிரணி சார்பில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து ஓட்டலில் உள்ள அறைக்கு சென்றார். சிறிது நேரத்துக்கு பின் தரை தளத்துக்கு வந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்-அமைச்சருமான ரங்கசாமி தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பா.ஜனதா அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி., துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான் குமார், ரிச்சர்டு, பாஸ்கர், லட்சுமிகாந்தன், ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், திருமுருகன், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், பிரகாஷ்குமார், நியமன எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு, என்.ஆர்.காங்கிரஸ் செயலாளர் ஜெயபால், அ.தி.மு.க. மாநில செயலாளர்கள் அன்பழகன், ஓம்சக்திசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவை அறிமுகப்படுத்தினர். அவர், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.யிடம் தனக்கு வாக்களிக்கும்படி ஆதரவு கோரி பேசினார். தொடர்ந்து பா.ஜனதா நிர்வாகிகளை சந்தித்தார்.

    ஜனாதிபதி வேட்பாளர் முர்முவுடன் மத்திய மந்திரிகள் முரளீதரன், எல்.முருகன், பா.ஜனதா தேசிய மகளிரணி தலைவி வானதிசீனிவாசன் எம்.எல்.ஏ., நீத்துதாமஸ், சுரத்குமார் முகந்தா, சுபாஷ் சந்திரா ஆகியோரும் பங்கேற்றனர். இதன்பின் அவர் லாஸ்பேட்டை விமான நிலையம் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை சென்றார்.

    ×