செய்திகள்
தடுப்பூசி போடும் பணி

நங்கநல்லூரில் கொரோனா தடுப்பூசி முகாம்... 200 பேர் பங்கேற்பு

Published On 2021-06-04 09:58 GMT   |   Update On 2021-06-04 09:58 GMT
நங்கநல்லூரில் டிஎன்ஜிஓ காலனி, எக்ஸ்டாடிக் டான்ஸ் ஸ்டுடியோவில், சென்னை பெருநகர மாநகராட்சி நடத்திய கொரோனா தடுப்பூசி முகாமில் 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
சென்னை:

சென்னை நங்கநல்லூர் பகுதியில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் டிஎன்ஜிஓ காலனி, எக்ஸ்டாடிக் டான்ஸ் ஸ்டுடியோவில் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி  முகாம் நடத்தப்பட்டது. காலை 9.30 மணி அளவில் இருந்து மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் பெரும்பாலானோர் முன் களப்பணியாளர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் ஆவர். ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்த நிகழ்வுக்கு வருகை தந்து முகாமை துவக்கி வைத்தார்.



முகாமை சீராக நடத்த பத்துக்கும் மேற்ப்பட்ட தன்னார்வலர்கள் பணிபுரிந்தனர். தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் ஒவ்வொருவருக்கும் அதை பற்றிய விபரங்கள், செய்ய வேண்டியவை/வேண்டாதவை தொடர்பான தகவல் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. ஒரு நாள் முன்பே இதை பற்றிய விபரங்கள் வாட்ஸ்அப்பிலும் பகிரப்பட்டது.

கொரோனா தடுப்பூசி பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த முகாமின் முக்கிய நோக்கம் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே போல் நகரின் பல்வேறு  இடங்களில் இயன்ற அளவு  தடுப்பூசி  முகாம்கள்  நடத்த திட்டமிட்டுள்ளனர். சென்னை பிளேட்லெட் கிளப் (Platelet Club) மற்றும் ஜைவ் வெல்னஸ் (Zive Wellness) தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் சிறப்பாக இணைந்து முகாம் முழுமையாக நடக்க உதவினர்.
Tags:    

Similar News