செய்திகள்
டி.நல்லிகவுண்டன் பாளையத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு முக கவசம் அணியப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு முக கவசம் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்

Published On 2021-04-29 04:40 GMT   |   Update On 2021-04-29 04:40 GMT
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் முதல் அலையை விட 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி:

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் முதல் அலையை விட 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று குறித்து மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முறைகளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். வெளியில் வரும் மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் கூட்டமாக கூடக்கூடாது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

அடிக்கடி கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பொது இடங்களில் கூடும் மக்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்திருக்கிறீர்களா? என்பதை அதிகாரிகளும் அடிக்கடி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லிகவுண்டன் பாளையத்தை சேர்ந்த பெண் தவமணி. இவர் அந்த பகுதியில் சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் டீ குடிக்க வருவார்கள். அப்படி வரும் வாடிக்கையாளர்கள் யாருமே முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வந்து சென்றனர்.

அவர்களிடம் தவமணி எவ்வளவோ எடுத்து கூறியும் அவர்கள் கேட்கவே இல்லை. இதனால் அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது என தவமணி யோசித்தார்.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முக கவசம் அணிவது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் தனது கடை அருகே உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு தவமணி முக கவசங்களை மாட்டி விட்டு வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

இதை பார்த்த வாடிக்கையாளர்கள் தாங்களும் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து டீக்கடைக்கு வரத் தொடங்கினர். இவரது இந்த செயலை அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர். 

Tags:    

Similar News