திருப்பூர் பனியன் நிறுவனங்களில் 30 சதவீதம் உற்பத்தி பாதிப்பு
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பனியன் உள்ளிட்ட ஆடைகள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.27 ஆயிரம் கோடி அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ரூ.25 ஆயிரம் கோடியாக உற்பத்தி சரிந்தது.
கொரோனா பாதிப்பில் இருந்து திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் மீண்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
இன்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் 3 ஷிப்ட்டுக்களாக செயல்பட்டு வந்த நிறுவனங்கள் 2 ஷிப்ட்டுக்கள் மட்டுமே இயங்க உள்ளன. இதனால் குறிப்பிட்ட நாட்களில் ஆடைகளை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கின் மூலம் 20 முதல் 30சதவீத உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பனியன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட ரூ.500கோடி மதிப்பிலான ஆடைகள் தேக்கமடைந்துள்ளன. மும்பையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அங்கு அனுப்பப்பட்ட சரக்குகள் அனைத்தும் திருப்பூர் ரெயில் நிலையத்தில் தேக்கமடைந்துள்ளன. இதேபோல் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் காடாத்துணி உள்ளிட்டவையும் தேக்கமடைந்துள்ளன.
இந்தநிலையில் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தங்களது சொந்த மாநிலங்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால் பனியன் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.