ஊட்டி மலை ரெயில் நாளை முதல் ரத்து- ரெயில்வே துறை அறிவிப்பு
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக நீலகிரி மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி முதல் நீலகிரி மலை ரெயிலை சிறப்பு ரெயிலாக இயக்கியது.
சிறப்பு ரெயிலாக இயக்கியதில் கட்டண உயர்வு காரணமாக சுற்றுலா பயணிகளிடையே நீலகிரி மலை ரெயிலுக்கு வரவேற்பு குறைந்து காணப்பட்டது.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருவதையடுத்து தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு இன்று முதல் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி மேட்டுப்பாளையம்- ஊட்டி, ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை மற்றும் குன்னூர்- ஊட்டி, ஊட்டி- குன்னூர் ரெயில் சேவையை சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் நாளை (21-ந்தேதி) முதல் மறு அறிவிப்பு வரை ரத்து செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை ரெயில்வே துறை வெளியிட்டுள்ளது.