செய்திகள்
கொள்ளையர்கள் புகுந்த தனியார் அடகு நிறுவனம்

திருமங்கலம் அருகே தனியார் அடகு நிறுவனத்தில் ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சி

Published On 2021-03-09 07:45 GMT   |   Update On 2021-03-09 07:45 GMT
திருமங்கலம் அருகே தனியார் தங்க அடகு நிறுவனத்தில் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
திருமங்கலம்:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி- ராஜபாளையம் சாலையில் மணப்புரம் தங்க நகை அடகு நிறுவனம் உள்ளது.

இங்கு திருமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர்.

திருமங்கலம் கிளையின் மேலாளர் கருப்பசாமி நேற்று வழக்கம் போல் அடகு நிறுவனத்தை மாலை 6 மணிக்கு பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 2.45 மணி அளவில் அடகு வங்கியில் வைக்கப்பட்டிருந்த அலாரம் திடீரென ஒலிக்கத் தொடங்கியது.

அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற டி.கல்லுப்பட்டி போலீசார் உடனடியாக வங்கி மேலாளருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் போலீசாரின் உதவியுடன் நகை அடகு கடைக்குள் சென்று பார்த்தார்.

அப்போது வங்கியின் பின்பக்க ஜன்னல் கம்பி ஆக்சா பிளேடால் அறுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் யாரோ மர்மநபர்கள் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து வங்கி லாக்கர் முன்பு இருந்த பூட்டை உடைக்க முற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் காரணமாக தான் லாக்கரின் முன்பு தரையின் அடியில் இருந்த சென்சார் கருவி மூலம் அலாரம் அடித்துள்ளது.

இதனை எதிர்பாராத மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதனால் வங்கி லாக்கரில் இருந்த ரூ. 4½ கோடி மதிப்பிலான தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் ரூ. 8 லட்சம் தப்பியது.

இந்த சம்பவம் குறித்து வங்கி மேலாளர் கருப்பசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஜன்னல் கம்பிகள் மற்றும் லாக்கரில் பதிவான கைரேகைகளை சேகரித்தனர்.

இதற்கிடையே மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடகு நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா மூலமும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தங்க அடகு நிறுவனத்தில் மர்மநபர்கள் கொள்ளை முயற்சி சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News