கிசான் திட்டத்தில் முறைகேடு- விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.27½ கோடி பறிமுதல்
விழுப்புரம்:
பிரதமரின் கிசான் திட்டத்தில் தமிழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாத போலி பயனாளிகள் அதிக அளவில் சேர்க்கப்பட்டு பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து போலி பயனாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வேளான் வருவாய்துறை குழுவினரால் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 9 ஆயிரம் பேர் வரை போலி பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 89 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.27½ கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய வேளாண் அலுவலர்கள், ஒப்பந்த பணியாளர்கள், கணினிசேவை மைய ஊழியர்கள் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின்பேரில் தற்போது 4 வேளாண் துணை இயக்குனர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு அதிக அளவில் முறைகேடு நடந்த வட்டாரங்களில் பணம் பறிமுதல் செய்யும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. டிசம்பருக்குள் இப்பணியை முடித்து பணம் முழுவதையும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.