அரக்கோணம் அருகே கல்லாற்று வெள்ளத்தில் மூழ்கி சென்னை கல்லூரி மாணவன் பலி
நெமிலி:
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் மேத்யூ. (வயது 20). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
மேத்யூ மற்றும் அவரது குடும்பத்தினர் அரக்கோணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தனர். நேற்று மாலை மோகன் குடும்பத்தினர் அரக்கோணம் அருகே கல்லாற்றில் செல்லும் தண்ணீரை வேடிக்கை பார்க்க சென்றனர்.
அப்போது மேத்யூ மற்றும் 3 வாலிபர்கள் கல்லாற்றில் குளிப்பதற்காக இறங்கினர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் மேத்யூவை திடீரென வெள்ளம் இழுத்துச் சென்றது.
மேத்யூ உடன் சென்ற வாலிபர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. மேத்யூவை வெள்ளம் இழுத்துச் செல்வதை கண்ட அவரது குடும்பத்தினர் கூச்சலிட்டு கதறி அழுதனர்.
இதுகுறித்து உடனடியாக அரக்கோணம் தீயணைப்பு துறையினர் மற்றும் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேத்யூவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று இரவாகி விட்டதால் வெளிச்சம் இன்மை காரணமாக மேத்யூவை தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இன்று காலை தீயணைப்புத்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கல்லாற்றில் மேத்யூவை தேடும் பணியில் ஈடுபட்டனர். காலை 7 மணி அளவில் கல்லாற்றில் இருந்து மேத்யூ பிணத்தை மீட்டனர்.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உறவினர் வீட்டிற்கு வந்த கல்லூரி மாணவன் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.