செய்திகள்
கொலை

ஏற்காட்டில் தம்பதி கொடூர கொலை- 3 பேர் சிக்கினர்

Published On 2020-10-01 08:43 GMT   |   Update On 2020-10-01 08:43 GMT
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொண்டலாம்பட்டி:

சேலம் மாவட்டம் ஏற்காடு செம்மநத்தம் ஊராட்சி காவேரி பீக்கில் கராரா எஸ்டேட் உள்ளது.

அங்கு ஜார்கண்ட் மாநிலம் கூட்டியைச் சேர்ந்த கொண்டாபகன் (வயது 41) என்பவர் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி சுதிகேன்ஸ் (வயது 36) கூலி வேலை செய்து வந்தார். இருவரும் அங்குள்ள பணியாளர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நீண்டநேரம் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அந்த பகுதியினர் எஸ்டேட் மேலாளர் சுனில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அங்கு விரைந்து சென்ற அவர் கதவை தட்டிப்பார்த்தார். கதவை திறக்காததால் உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கொண்டாபகன் தலையில் வெட்டப்பட்டும், சுதிகேன்ஸ் கழுத்து அறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

இதுகுறித்து எஸ்டேட் மேலாளர் சுனில்குமார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து வந்த சேலம் ரூரல் டி.எஸ்.பி. உமாசங்கர் தலைமையிலான போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த தம்பதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்ய பயன்படுத்திய விறகு கட்டை, அரிவாள் உள்பட ஆயுதங்களையும் கைப்பற்றினர். மோப்பநாய் லில்லி சற்று தொலைவில் உள்ள தண்ணீர் தொட்டிவரை சென்று திரும்பியது. பக்கத்து குடியிருப்பில் குடியிருந்த ஹைராபோத்ரே என்பவரை காணவில்லை.

இந்த சம்பவத்தில் ஹைராபோத்ரே உள்பட மேலும் சிலர் 2பேரையும் கொலை செய்துவிட்டு தப்பியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஏற்காடு மலைப்பாதை சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர சோதனை செய்தனர். மேலும் சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்ட போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

டி.எஸ்.பி. உமாசங்கர், ஏற்காடு இன்ஸ்பெக்டர் ஆனந்தன், ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர் குலசேகர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இதையடுத்து இந்த கொலையில் தொடர்புடைய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராம் சேனாத், சுக்காராம், முச்சாரா ஆகிய 3 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த புதுராம் (30) என்பவர் மனைவி ஹாங்கி (28) என்பவருடன் கொண்டாபகன் தங்கியிருந்த குடியிருப்பு அருகே தங்கியிருந்தார். ஹாங்கி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

அப்போது குழந்தை நல்லமுறையில் பிறக்கும் என்று கூறி மூலிகை பொடியை சுதிகேன்ஸ் கொடுத்தார். இதை சாப்பிட்ட ஹாங்கி பிரசவத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜார்கண்ட் சென்றார்.

தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சிறிதுநேரத்தில் தாயும், குழந்தையும் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் புதுராம் அதிர்ச்சி அடைந்தார். மேலும் சுதிகேன்ஸ் கொடுத்த மூலிகை பொடியால்தான் தனது மனைவியும், குழந்தையும் இறந்ததாக புதுராம் கருதினார்.

இதையடுத்து சுதிகேன்ஸ் மற்றும் அவரது கணவர் கொண்டாபகனையும் கொலை செய்ய புதுராம் முடிவு செய்தார். அதற்காக திருப்பூரில் இருந்த ஹைராபோத்ரே மற்றும் சுக்காராம் ஆகியோரை ஏற்காட்டிற்கு புதுராம் வரவழைத்தார்.

பின்னர் அந்த தம்பதியை அந்த கும்பல் கொலை செய்ய காத்திருந்தது. தொடர்ந்து மதுபோதையில் இருந்த புதுராம், ராம் சேனாத், சுக்காராம், முச்சாரா, ஹைராபோத்ரே ஆகிய 5 பேரும் நேற்று முன்தினம் இரவு கொண்டாபகன் வீட்டிற்கு சென்றனர்.

பின்னர் அங்கிருந்த கொண்டாபகன் மற்றும் அவரது மனைவி சுதிகேன்ஸையும் கட்டையால் அடித்தும், அரிவாளால் கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்தனர். பின்னர் வீட்டின் முன்கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு பின்வாசல் வழியாக அந்த கும்பல் தப்பி சென்றதும் தெரியவந்தது.

இதில் முக்கிய குற்றவாளியான புதுராம், ஹைராபோத்ரேவும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். அவர்கள் சிக்கினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் இந்த வழக்கில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
Tags:    

Similar News