செய்திகள்
கைது

மண்டபம் அருகே 1½ வயது குழந்தை எரித்துக்கொலை- தந்தை கைது

Published On 2020-08-30 08:28 GMT   |   Update On 2020-08-30 08:28 GMT
மண்டபம் அருகே 1½ வயது குழந்தையை குடிபோதையில் எரித்து கொன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை நாகநாதர் கோவில் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி (வயது 27), டிரைவர். இவருக்கும் பாம்பன் அக்காள்மடம் பகுதியைச் சேர்ந்த மரியா அவிஸ்டாவிற்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயது ஆண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி மரியா அவிஸ்டாவின் தங்கை திருமணம் அக்காள்மடத்தில் நடந்தது.

இந்த திருமணத்திற்கு சென்ற இடத்தில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த முனியசாமி, குழந்தையை தன்னிடம் தருமாறு மனனவியிடம் தகராறு செய்தார்.

குழந்தையை தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மரியா அவிஸ்டாவை முனியசாமி தாக்கி விட்டு, அவரிடம் இருந்து குழந்தையை பறித்துக் கொண்டு ஆட்டோ வில் முனியசாமி ஊர் திரும்பினார்.

திடீரென்று ஆட்டோவை நிறுத்தச்சொல்லி முனியசாமி மண்டபம் முகாம் பஸ் நிறுத்தத்தில் குழந்தையுடன் இறங்கி தண்டவாளம் வழியாக நடந்து சென்றார்.

வேதாளை அருகே திறந்த வெளியில் சென்ற போது மனைவி மீதுள்ள ஆத்திரத்தில் குழந்தையை எரித்து கொன்று விட்டு முனியசாமி வீடு திரும்பினார்.

இரவில் வீடு திரும்பிய முனியசாமியிடம் குழந்தை இல்லாதது கண்டு மனைவி மரிய அவிஸ்டா திடுக்கிட்டார். குழந்தை குறித்து கேட்டபோது ஒரு இடத்தில் இருப்பதாக முனியசாமி கூறினார்.

இதில் சந்தேகமடைந்த மரிய அவிஸ்டா இது குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் குழந்தையை முனியசாமி எரித்துக்கொன்றது தெரிந்தது. அவரது தகவல்படி எரிந்த குழந்தையின் உடலை போலீசார் மீட்டு, முனியசாமியை கைது செய்தனர். தொடர்ந்து குழந்தையை எரித்தது தொடர்பாக மண்டபம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News