செய்திகள்
கைது

புதையலுக்கு ஆசைப்பட்டு 5 மாத ஆண் குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி- 3 பேர் கைது

Published On 2020-08-04 10:10 GMT   |   Update On 2020-08-04 10:10 GMT
களக்காடு அருகே புதையலுக்கு ஆசைப்பட்டு 5 மாத ஆண் குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக குழந்தையின் தந்தை, போலி சாமியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழசடையமான்குளத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 39), கூலி தொழிலாளி. இவரது மனைவி ராமலட்சுமி (35). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். குமரேசனின் நண்பர் டோனாவூரைச் சேர்ந்த சாமியார் கிரானராஜன் (64).

இந்த நிலையில் கிரானராஜன், குமரேசனிடம் உனது வீட்டில் புதையல் உள்ளது. அதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று தெரிவித்தார். ஆனால், அந்த புதையலை எடுக்க பூஜை செய்ய வேண்டும். அதற்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் செலவு ஆகும் என்று கிரானராஜன் தெரிவித்தார். இதை உண்மை என்று நம்பிய குமரேசன் இதுகுறித்து தனது தாய் பார்வதியிடம் (65) கூறி உள்ளார். புதையலுக்கு ஆசைப்பட்டு 2 பேரும் கிரானராஜனிடம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கொடுத்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு குமரேசன் வீட்டிற்கு கிரானராஜன் பூஜை நடத்த வந்தார். வீட்டின் நடுவே 3 அடி நீளத்திலும், 2 அடி அகலத்திலும், 5 ஆடி ஆழத்திலும் குழி தோண்டினார்கள்.

அந்த குழியில் முதலில் ஒரு கோழியை பலி கொடுத்தனர். பின்னர் ஒரு பூனையை பலி கொடுப்பதற்காக அதனை வெட்ட முயன்றனர். ஆனால், பூனை தப்பித்து ஓடிவிட்டது. இதனால் பூஜையை நிறுத்திய கிரானராஜன் மற்றொரு நாளில் பூஜையை தொடரலாம் என்று கூறினார்.

மேலும் பூஜையின்போது பூனை தப்பி விட்டதால் உனது குழந்தைகளின் ஒருவனை பலி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறினார். இதையடுத்து குமரேசனின் 5 மாத ஆண் குழந்தையை நரபலி கொடுக்க முயன்றனர்.

இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் உடனடியாக குமரேசன் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர்கள் குழந்தையை நரபலி கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தனர். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக களக்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் கிரானராஜன் போலி சாமியார் என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக குமரேசனின் உறவினரான சொர்ணபாண்டி (34) என்பவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், குமரேசன், அவரது தாயார் பார்வதி, போலி சாமியார் கிரானராஜன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

களக்காடு அருகே 5 மாத ஆண் குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News