செய்திகள்
குற்றாலம் ஐந்தருவியின் 2 கிளைகளில் தண்ணீர் கொட்டியபோது எடுத்த படம்.

குற்றாலத்தில் சீசன் அறிகுறி- அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுமா?

Published On 2020-06-03 02:30 GMT   |   Update On 2020-06-03 02:30 GMT
தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் குற்றாலத்தில் சீசனுக்கான அறிகுறி தென்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
தென்காசி:

தென்தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமான குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் தொடங்கும். குற்றால சீசனில் இங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும். குளிர்ந்த காற்று வீசும். இடையிடையே இதமான வெயிலடிக்கும். இந்த சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்வார்கள். கடந்த ஆண்டு சீசன் தொடங்கிய சில நாட்களிலேயே சாரல் மழை நின்று விட்டது. இதனால் அருவிகள் வறண்டன. ஆகஸ்டு மாதம் முடியும் நேரத்தில் மழை பெய்தது. ஆனால், சீசன் காலம் முடிந்ததால் சுற்றுலா பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்து விட்டது.

இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கிவிட்டது. இதனால் அங்கு பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குற்றாலம், தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குற்றாலத்தில் மலைப்பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவுவதால் சீசனுக்கான அறிகுறி தென்பட்டுள்ளது. அருவிகளில் மிகவும் குறைவான தண்ணீர் விழுகிறது.

சாரல் மழை தொடர்ந்து நீடித்தால் எந்த நேரத்திலும் சீசன் தொடங்கும் என தெரிகிறது. ஆனால், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, குற்றாலத்தில் சீசன் தொடங்கி விட்டால் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

எனினும் குற்றாலம் அருவிக்கரைகளில் சுற்றுலா பயணிகள் நுழைய முடியாதபடி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா தலங்களுக்கும் தளர்வுகள் அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News