பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் அதிகரிப்பு
ஊத்துக்கோட்டை:
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து கடந்த செப்டம்பர் 28-ந் தேதியில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சராசரியாக 350 கனஅடி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருந்தது. பிப்ரவரி மாத கடைசியில் தண்ணீர் வரத்து 150 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி ஆகியோர் ஆந்திர முதல் அமைச்சர் ஜெகன் மோகன்ரெட்டியை சந்தித்து கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டதின்படி கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து கடந்த 4-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமானது. அன்று முதல் வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை நீர் வரத்து 630 கன அடியாக அதிகரித்துள்ளது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர் மட்டம் 29.01 அடியாக பதிவானது. 1521 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 313 கனஅடி, சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி தண்ணீர் அனுப்படுகிறது.