செய்திகள்
தற்கொலை

தர்மபுரி அரசு மருத்துவமனையில் பொக்லைன் டிரைவர் தற்கொலை

Published On 2020-03-03 17:33 GMT   |   Update On 2020-03-03 17:33 GMT
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற பொக்லைன் டிரைவர் தர்மபுரி அரசு மருத்துவமனையின் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). பொக்லைன் டிரைவர். இவருடைய மனைவி நதியா(32). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இதனிடையே மனைவியின் நடத்தையில் சக்திவேலுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனிடையே நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறின்போது ஆத்திரமடைந்த சக்திவேல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து நதியாவின் கழுத்தை அறுத்தார். இதில் படுகாயமடைந்த நதியா பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியை கொலை செய்த சக்திவேல் தனது கழுத்தையும் கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரை 2 போலீசார் கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை கழிப்பிடத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற சக்திவேல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் 5-வது மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை பார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஊத்தங்கரை போலீசாருக்கு, தர்மபுரி போலீசார் தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை 5-வது மாடியில் இருந்து குதித்து டிரைவர் தற்கொலை செய்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் உயர் போலீஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News