மதுரவாயல் பகுதியில் கடைகளை உடைத்து கொள்ளையடித்த வாலிபர் கைது
போரூர்:
மதுரவாயல் ராஜீவ் காந்தி நகர் எம்.ஜி.ஆர். மெயின் ரோட்டில் முதல் தளத்தில் வசித்து வருபவர் முத்துக்குமார். இவர் வீட்டின் கீழே சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார்.
கடந்த 20-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்து வெளியே வந்த முத்துக்குமார் தனது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் வைத்து இருந்த ரூ.45 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது.
இதேபோல் அருகில் உள்ள முகமது இர்பான் என்பவரது மெடிக்கல் கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்றனர். சோபன் என்பவர் கடையிலும் ரூ.15 ஆயிரம் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து மதுரவாயல் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் முத்துக்குமார் கடையை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையை சேர்ந்த சதீஷ் என்பது தெரிந்தது.
அவனை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.65 ஆயிரம் ரொக்கம், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.