செய்திகள்
கோப்புப்படம்

செங்கல்பட்டில் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை

Published On 2020-02-13 05:09 GMT   |   Update On 2020-02-13 05:09 GMT
செங்கல்பட்டு அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை தந்த வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை:

செங்கல்பட்டு அருகே உள்ள முல்லிப்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராம் சர்மா உள்பட ஏராளமான வடமாநில தொழிலாளிகள் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

சம்பவத்தன்று மாலை அவ்வழியே பிளஸ்-1 மாணவி ஒருவர் தனியாக பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராம்சர்மா திடீரென மாணவியை மிரட்டி அருகில் உள்ள மறைவான இடத்துக்கு கடத்தி சென்றார்.

பின்னர் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அவ்வழியே சென்றவர்கள் அங்கு திரண்டு வந்தனர். உடனே ராம் சர்மா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

மாணவியை பொதுமக்கள் மீட்டு அனுப்பி வைத்தனர். இதுபற்றி அறிந்ததும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கட்டிடப் பணி நடைபெறும் இடத்தில் திரண்டனர். அவர்கள் மாணவியிடம் தவறாக நடந்த தொழிலாளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராம் சர்மாவை தேடி வருகிறார்கள். இதுதொடர்பாக கட்டிட மேற்பார்வையாளர் மற்றும் தொழிலாளிகள் 4 பேரை பிடித்து விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News