செய்திகள்
கொள்ளை நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடப்பதை காணலாம்

பழனியில் வக்கீல் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

Published On 2020-01-11 05:29 GMT   |   Update On 2020-01-11 05:29 GMT
பழனியில் வக்கீல் சங்கதலைவர் வீட்டில் 50 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை அள்ளிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பழனி:

பழனி சண்முகபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் அருளானந்தம் முத்துக்குமாரசாமி (வயது64). இவர் பழனி வக்கீல் சங்க தலைவராக உள்ளார். இவரது மனைவி வெற்றிச்செல்வி. ஆயக்குடி பேரூராட்சியில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மகன், மருமகள் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். மகளுக்கு திருமணமாகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

மகளுக்கு வளைகாப்பு என்பதால் அருளானந்தம் குடும்பத்துடன் சென்னைக்கு சென்று விட்டார். இன்று காலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. உள்ளே வைத்திருந்த 50 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இது குறித்து பழனி டவுன் போலீசில் அருளானந்தம் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.

அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா? என்றும் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக நெருக்கடியான மக்கள் வசிக்கும் இப்பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News