டெங்கு கொசு புழு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி இருந்த 2 பள்ளிக்கு அபராதம்
தமிழகம் முழுவதும் டெங்கு கொசுக்கள் ஒழிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா கடைகள், வீடுகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, டயர் கடைகள், வணிக நிறுவனங்களில் டயர் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள பொருட்களில் டெங்கு புழு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி இருந்த நிறுவனங்கள் மீது அபராதம் விதித்தார். மேலும் பள்ளிகளிலும் சோதனை நடத்தினார்.
இதனையடுத்து 2 பள்ளிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டன. இது குறித்து ஆணையாளர் சுதா கூறியதாவது:-
மழைக்காலத்தையொட்டி டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வணிக நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் வீடுகளில் கொசு புழு உற்பத்தி ஆகாத வகையில் தேங்கும் தண்ணீரை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
அதனையும் மீறி கொசு புழு உற்பத்தி ஏற்படுத்தும் வகையில் தண்ணீர் தேங்கி இருந்த தனியார் நிறுவனங்கள், பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் ரூ 65,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சோதனை மேலும் தொடரும். கொசு உற்பத்தி தடுக்காமல் உள்ள கடைகள், வீடு மற்றும் அனைத்து நிறுவனங்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.