செய்திகள்
ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ்

பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்தேன்- சேலம் ஆட்டோ டிரைவர் வாக்குமூலம்

Published On 2019-10-14 04:55 GMT   |   Update On 2019-10-14 04:55 GMT
சேலம் அருகே ஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கைதான ஆட்டோ டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம்:

சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 42). ஆட்டோ டிரைவரான இவர் வாலிபர் ஒருவரை ஹோமோசெக்சுக்கு அழைத்ததாக மகுடஞ்சாவடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே மோகன் ராஜ் ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பின்னர் அந்த வீடியோவில் இருந்த பெண் 2 ஆயிரம் ரூபாய்க்காக தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கொண்டலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மோகன்ராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறையில் இருந்த அவரை மீண்டும் கைது செய்தனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கடந்த 10-ந்தேதி கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அப்போது கோர்ட்டின் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த பெண் தனக்கு நடந்த கொடுமை குறித்து கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து மோகன் ராஜை கடந்த 11-ந்தேதி முதல் 7 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது எத்தனை பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்தார் என்பது குறித்தும் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டனர்.

மேலும் ஆபாச படம் எடுத்து மிரட்டி மிரட்டி எத்தனை பெண்களை உல்லாசம் அனுபவித்தார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர் சொன்ன பதில்களை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும் அவரது செல்போனையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் மேலும் பல பெண்களை மோகன்ராஜ் மிரட்டி உல்லாசம் அனுபவிக்கும் வீடியோ இருந்ததாக கூறப்படுகிறது. சேலம் அருகே தற்கொலைக்கு முயன்ற ஒரு மாணவி அப்பாவுக்கு தெரிஞ்சுடுமே என்று கதறிய பதிவும் அவரது செல்போனில் இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தினர். அப்போது மோகன் ராஜ் பல பெண்களை மிரட்டி சீரழித்ததையும் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் மாணவி தற்கொலைக்கு முயன்றதற்கும் மோகன்ராஜிக்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து மோகன் ராஜின் வீட்டிற்கு நேற்று அவரை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரது வீட்டிலும் ஏதாவது ஆபாச சி.டி.கள். உள்ளதா? செல்போன்கள் ஏதாவது மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் தீவிர சோதனை நடத்தினர்.

மேலும் இந்த சம்பவத்தில் மோகன்ராஜிக்கு உதவியதாக கூறப்பட்ட அவரது நண்பர்களான பெருமாகவுண்டம்பட்டியை சேர்ந்த சதா என்ற சதாசிவம் மற்றும் மணிகண்டன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர்களது செல்போன்களையும் ஆய்வு செய்தனர். அப்போது மோகன்ராஜ் தனது செல்போனை மணிகண்டனிடம் கொடுத்ததையும், அதில் இருந்த வீடியோக்களை அவர் தனது செல்போனுக்கு மாற்றியதும் பின்னர் அதனை அவர் சமூக வலைதளங்களில் பரப்பியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களது செல்போன்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மேலும் பல ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மோகன் ராஜின் நண்பரான சதாசிவத்தை நேற்றிரவு விடுவித்த போலீசார் மேலும் அழைக்கும் போது விசாரணைக்கு வர வேண்டும் என கூறி அனுப்பி வைத்தனர். மணிகண்டனிடம் இன்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் இந்த வழக்கில் பரபரப்பு நீடித்து வருகிறது.
Tags:    

Similar News