செய்திகள்
கோப்புப்படம்

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

Published On 2019-10-01 04:41 GMT   |   Update On 2019-10-01 04:41 GMT
நெல்லை மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 2-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது.

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும். இந்த படகுகள் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு சென்று இரவு 9 மணிக்குள் துறைமுகம் திரும்பி விடும்.

சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் சில விசைப்படகுகள் நெல்லை மாவட்ட கடல் பகுதிக்குள் எல்லை தாண்டி செல்வதாக புகார் கூறப்பட்டது.

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக எழுந்த புகார் தொடர்பாக சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களுக்கும், நெல்லை மாவட்டம் இடிந்தகரை, கூத்தங்குழி, கூட்டப்புளி மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட மோதல் முற்றி நேற்று நெல்லை மாவட்ட மீனவர்கள், நாட்டு படகுகள் மூலம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் வந்தனர். அவர்கள் கடலுக்குள் இருந்த படி துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மீனவர்களின் போராட்டம் பற்றி அறிந்ததும் கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீசார் மீன்பிடி துறைமுகத்திற்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் கடலுக்குள் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நெல்லை மாவட்ட மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.

இதற்கிடையே நெல்லை மாவட்ட மீனவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனைக்கு இரு மாவட்ட அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும், மீன்பிடிப்பதற்கான உரிமைகளை பெற்றுத்தர வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று 2-வது நாளாக மீனவர்களின் போராட்டம் நீடித்தது. பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் தினமும் இரவு முதல் அதிகாலை வரை மீன் மார்க்கெட்டில் மீன்கள் விற்பனை களை கட்டி இருக்கும். குமரி மாவட்ட மீன் வியாபாரிகள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் சின்னமுட்டம் வருவார்கள்.

விசைப்படகுகள் எதுவும் நேற்று கடலுக்கு செல்லாததால் மீன் மார்க்கெட் நேற்று மூடிக் கிடந்தது. இன்றும் போராட்டம் நீடித்ததால் மார்க்கெட் வெறிச்சோடியது.
Tags:    

Similar News